சென்னை : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோவையில் அ.தி.மு.க., நடத்திய பொதுக்கூட்டம் பிரமாண்டமாக அமைந்தது. கோவை பொதுக்கூட்டம் தூள் கிளப்பி வெற்றி கண்டதை அடுத்து , திருச்சி ஆர்ப்பாட்டத்துக்கும் அவரே தலைமை தாங்கி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க முடியாமல் தமிழக மீனவர்கள் அச்சத்தில் இருக்கின்றார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் காவிரி ஆற்றுத் தண்ணீரை நம்பி நடவு செய்யப்பட்ட பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மணல் கொள்ளை காரணமாக ஆறுகளின் தரைமட்டம் கீழே இறங்கி உள்ளதால், தண்ணீர் வரும் போதும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. கடுமையான மின்வெட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டுவிட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் 24.8.2010 அன்று, திருச்சி மாநகரில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment